''மாஸ்'' குவிந்ததால் "பாஸ்" முறை ரத்து

மதுரை: மதுரை மாவட்டத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மக்கள், கூட்டமாக கூடுவதால் வாகன அனுமதிக்கு வழங்கப்படும் பாஸ், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. அத்யாவசிய பணிகள் தவிர்த்து அனைத்தும் தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும், அத்யாவசிய தேவைகளுக்காக வெளியே செல்பவர்கள் வாகன அனுமதி ‛பாஸ்' வாங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனாலும், அத்யாவசிய பொருட்கள் வாங்க செல்கிறேன் என்ற பெயரில் ஒரே இடத்தில் மக்கள் கூட்டமாக கூடுவதும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. சமூக இடைவெளி என்னும் நடைமுறை காற்றில் வீசப்பட்டு, பலர் பொறுப்பில்லாமல் கூட்டம் கூடுவதால் கொரோனா பெருமளவு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வாகன அனுமதி பாஸ் வழங்கும் மைய அலுவலகத்தில் ஏராளமானோர் கூடினர்.



இதனையறிந்த, மதுரை கலெக்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுரை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக தமிழக முதல்வர் அறிவுரை படி, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு அத்யாவசிய பொருட்கள், காய்கறிகள் போன்றவை இருப்பிடத்திற்கு அருகில் நியாயமான விலையில் கிடைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. ஆகவே, அத்யாவசிய பொருட்கள் வாங்க விரும்பும் பொதுமக்கள், தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் உள்ள கடைகளுக்கு சென்று வாங்கிக்கொள்ள வேண்டும். அத்யாவசிய பணிகளில் ஈடுபடக் கூடிய அலுவலர்கள், பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், வாகன பயணங்கள் மேற்கொள்ள ஏற்கனவே உள்ள நடைமுறையே பின்பற்றலாம். அத்யாவசிய பணிகளுக்காக ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அனுமதி தொடரும். மேலும் வாகன அனுமதி தொடர்பாக எடுக்கப்பட முடிவு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.